உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடி விழுந்து வீட்டின் கூரை சேதம் மின்னல் தாக்கி மாடு உயிரிழப்பு

இடி விழுந்து வீட்டின் கூரை சேதம் மின்னல் தாக்கி மாடு உயிரிழப்பு

திருவாலங்காடு:பாகசாலையில் வீட்டின் கூரை மீது இடி விழுந்ததில் கட்டடம் சேதமடைந்தது. மேலும், அரிசந்திராபுரத்தில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை, மணவூர், பழையனுார், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது. நேற்று காலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகசாலை பிள்ளையார் கோவில் தெருவில் கஸ்துாரி, 53, என்பவரின் வீட்டின் கூரையில் இடி விழுந்தது. இதில், கூரை சேதமடைந்து, ஓட்டை விழுந்தது. மேலும், வீட்டில் இருந்த மின் இணைப்பு ஒயர்கள் எரிந்து நாசமாகின. வீட்டு உபயோக பொருட்களான 'ஏசி' இன்வெர்ட்டர், 'டிவி' மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. மணவூர் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தார். அப்போது, நிவாரணம் வழங்கக் கோரி, பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பசு உயிரிழப்பு

திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மனைவி கவுரி, 35. இவர், கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அரிசந்திராபுரம் கிராமத்தில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், மாட்டு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 வயது பசு மாடு, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி