பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து அறிவுரை
பழவேற்காடு, டிச. 10-பழவேற்காடு மீனவப்பகுதியில் உள் தோணிரவு கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், செஞ்சியம்மன் நகரில் இருந்து, 30 பேர் படிக்கின்றனர்.இவர்கள் பள்ளிக்கு சரிவர வருகை தராமல், பெற்றோருடன் மீன்பிடி தொழிலுக்கு செல்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன், பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோரிடம், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆனால் மாணவர்கள் வருகை இல்லை.இந்த தகவல் அறிந்த பழவேற்காடு 'உறவு அறக்கட்டளை' சார்பில், நேற்று, செஞ்சியம்மன் நகரில் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில், திருப்பாலைவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திருவேங்கடம், ராகதேவன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.அவர்கள் கூறியதாவது:கல்வி கற்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். வறுமையை காரணமாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கக்கூடாது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை, தொழிலில் ஈடுபடுத்துவது, குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டப்படி குற்றமாகும்.அவர்களை இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வரவேண்டும். குழந்தைகள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிகழ்ச்சியில், உறவு அறக்கட்டளை இயக்குனர் ரமேஷ், சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷன் உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.