அகற்றப்பட்ட சாலையோர கடைகளுக்கு பஸ் நிலையம் அருகே இடம் ஒதுக்கீடு
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த 16ம் தேதி, மாநில நெடுஞ்சாலைத் துறையினர்அகற்றினர்.வாழ்வாதாரம் இழந்த, 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் முறையிட்டனர். விரைவில் இடம் தேர்வு செய்து ஒதுக்கப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்திருந்தார்.இந்நிலையில், எம்.எல்.ஏ., தெரிவித்ததன்படி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் அருகே, இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஒதுக்கிய இடத்தில், பேரூராட்சி தலைவர் ஷகிலா, துணை தலைவர் கேசவன் முன்னிலையில், நேற்று, பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்யப்பட்டது. விரைவில், கடைகளுக்கான இடம் ஒதுக்கி சாலையோர வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.