வளர்ச்சி பணிகளை விரைவாக நிறைவேற்ற கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்து, தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குளும் நிறைவேற்ற வேண்டும் என, உத்தரவிட்டார். திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், இன்று பொதுபணித் துறை சார்பாக, 2.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா மற்றும் ஏரி அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவள்ளுர் நகராட்சி, வி.எம்.நகரில், பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சிறுபாலம், ஜே.என்.சாலை அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் கால்வாய் துார் வாரி ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பணியை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் முடிக்குமாறு, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். திருவள்ளுர் ஒன்றியம், திரூர் அரசு மாதிரி உயர்நிலை பள்ளியில், ஊரக வளர்ச்சி துறை சார்பாக 8.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையல் அறை கட்டும் பணி; புல்லரம்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன், நகராட்சி கமிஷனர் தாமோதரன், நகராட்சி பொறியாளர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.