ஏரியில் விதிமீறி மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக புகார்
திருவள்ளூர்:பட்டரைபெரும்புதுார் ஏரியில் செயல்படும் சவுடு மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். பட்டரைபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் வசந்தகுமார் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: பட்டரைபெரும்புதுார் ஏரியில், சவுடு மண் குவாரிக்கு, சர்வே எண்: 312/7 என்ற இடத்தில், 45 நாட்களுக்கு 2,000 லோடு என்ற அளவில் சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களுடன், மற்ற இடங்களிலும், நாள்தோறும் 1,000 லோடுக்கு மேல், போலியாக பில் தயாரித்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 15 அடிக்கு மேல் தோண்டி, அங்குள்ள மணலையும் சட்டவிரோதமாக அள்ளிச் செல்கின்றனர். இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்த சவுடு மண் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்வதுடன், விதி மீறியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராமதண்டலம் ஏரியில் மண் எடுக்க எதிர்ப்புராமதண்டலம் ஏரியில் சவுடு மண் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரியும், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராமதண்டலம் கிராமத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமதண்டலம் ஏரி, சர்வே எண்: 367ல், 71 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரியை நம்பி, மூன்று போகம் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் சவுடு மண் எடுக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி அளிக்கப்பட்டால், பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். வரும் காலங்களில் நீர் ஆதாரம் குறைந்து, விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, ராமதண்டலம் ஏரியில், மண் எடுக்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.