சாம்பல் செல்லும் குழாய்களுக்கு அமைக்கப்பட்ட துாண்கள் சேதம்
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின்நிலையம் ஒன்று மற்றும் இரண்டில், ஐந்து அலகுகள் வாயிலாக, தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.இந்த அனல் மின்நிலையத்தில், மின் உற்பத்திக்காக தினமும் 31 லட்சம் கிலோ நிலக்கரி எரியூட்டும்போது, அதில் 40 சதவீதம் சாம்பலாக வெளியேறுகிறது.அந்த சாம்பல் தண்ணீருடன் ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக, 8 கி.மீ., தொலைவில் உள்ள செப்பாக்கம் கிராமத்தின் அருகே கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.தண்ணீர் வற்றிய பின், காய்ந்த சாம்பல் துகள்கள், சாலை கட்டுமான பணிகளுக்கும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் லாரிகள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.சாம்பல் கொண்டு செல்லும் இரும்பு குழாய்கள் கான்கிரீட் சுவர் அமைத்து, அதன் மீது பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, இந்த கான்கிரீட் சுவர்கள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன.கான்கிரீட் பூச்சு கொட்டியும், விரிசல்கள் ஏற்பட்டும், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன. இந்த துாணகள் பலவீனம் அடைந்து வருவதால், உடைந்து விழும் நிலை உள்ளது. இதனால், இரும்பு குழாய்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.எனவே, அனல்மின் நிலைய நிர்வாகத்தினர், உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த துண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.