முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் மூலவரை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.