கூவம் ஆற்றில் மேம்பாலம்: ரூ.17 கோடியில் அமையுது
கடம்பத்துார்: கூவம் ஆற்றில், 17 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலம் ஊராட்சி வழியாக கூவம் ஆறு செல்கிறது. கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இப்பகுதி மக்கள், 6 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். தமிழக அரசு உத்தரவுப்படி, இப்பகுதியில் 17.20 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்தது. திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மேம்பாலம் கட்டும் பணியை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஒன்பது மாதத்தில் மேம்பால பணி நிறைவடையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.