கும்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணி...ஆமை வேகம் :4வது காலக்கெடுவை நோக்கி நகரும் அவலம்
கும்மிடிப்பூண்டி:இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் தரம் உயர்த்தும் பணிகள், காலக்கெடு கடந்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணிகளை துரிதப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய ரயில்வே துறை சார்பில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை தரம் உயர்த்துதல் மற்றும் நவீன மயமாக்குதல் பணிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அவற்றில், சென்னை மண்டலத்தில் தரம் உயர்த்தப்படும் 15 ரயில் நிலையங்களில், கும்மிடிப்பூண்டியும் ஒன்று. ரயில் பயணியரின் பயன்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தி நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.தொழிற்சாலை நகரமான கும்மிடிப்பூண்டியில் உள்ள ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாக உள்ளது. கும்மிடிப்பூண்டி -- சென்னை சென்ட்ரல் இடையே, தினமும் 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.தினசரி பல்லாயிரக்கணக்கான பயணியர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ரயில் பயணியர் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், கணினி முன்பதிவு மையம் இயங்கி வருகிறது.'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் பைபாஸ் ஆகிய இரு பகுதிகளில், ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இரு பிரமாண்ட நுழைவாயில் கட்டடங்கள், லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் நடைபாலங்கள், நான்கு பார்க்கிங் வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.இது தவிர வணிக வளாகம், நவீனமயமான நடைமேடைகள், எலக்ட்ரானிக் திரைகள், உணவகங்கள், ரயில் பயணியர் ஓய்வு அறை, புதிய முன்பதிவு மையம், ஒப்பனை அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதற்காக, ரயில் நிலையத்தின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த, 2.26 ஏக்கர் நிலத்தை ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது.கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை, கடந்த 2023 ஜூலை மாதம் நடந்தது. தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 6ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது, '2024 மார்ச் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்' என, சென்னை மண்டல ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதன்பின், 2024 டிசம்பர் மாதம், 2025 மார்ச் மாதம், 2025 மே மாதம் என, மொத்தம் மூன்று முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை, 75 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை என, பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.காலக்கெடு பல கடந்தும், தரம் உயர்த்தும் பணிகள் வேகம் எடுக்காமல் இருப்பது ரயில் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகம் திட்டத்திற்கான நிதி வெளியிடுவதில் தாமதிப்பதால், பணிகளில் தொய்வு நிலவுவதாக கூறப்படுகிறது.நெருக்கடியான சாலை வசதியால், தளவாடங்கள் கொண்டு செல்வதில் தாமதம், நில எடுப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால், பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது. தற்போது, கட்டுமான பணிகள் வேகமெடுத்து, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்.- சென்னை மண்டல ரயில்வே அதிகாரி.