| ADDED : டிச 31, 2025 05:42 AM
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டத்தில், ஜன., 28ம் தேதி வரை, 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முகாமை, நேற்று முன்தினம் திருவாலங்காடில் கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார். திருவாலங்காடில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், நேற்று முன் தினம் துவக்கி வைத்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில், 2.80 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாம், ஜன., 28ம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. கால்நடை உரிமையாளர்கள், தங்களின் பசுக்கள், எருமைகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டிகளுக்கு முகாம் நடைபெறும் நாளன்று, கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது.