வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சிறை
மணவாளநகர்:திருநெல்வேலி மாவட்டம், முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம், 31 என்பவர், போளிவாக்கம் பகுதியில் தங்கி, இங்குள்ள சித்தேரிக்கரை பகுதியில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் காயிலான் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த வெங்கத்துார் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், 29 என்பவர், குடிபோதையில் ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து சுந்தரலிங்கம் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், அன்பரசனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.