இருளில் மூழ்கும் மேம்பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கும்மிடிப்பூண்டி, மின் விளக்குகள் இன்றி, இரவு நேரத்தில் பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் இருளில் மூழ்குவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்தில் சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்த எல்.இ.டி., மின் விளக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதானது. பலவீனமாக இருந்த சில மின் கம்பங்கள், 'மிக்ஜாம்' புயலில் முறிந்து விழுந்தன. எஞ்சிய மின் கம்பங்களும், எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், மேம்பாலத்தில் மின் விளக்கு வசதியின்றி, இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. அப்போது, மேம்பாலத்தை கடக்கும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, புதிய மின் கம்பங்களும், மின் விளக்குகளும் அமைக்க, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.