உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூழ்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை கனமழைக்கு முன் தீர்வு காண கோரிக்கை

மூழ்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை கனமழைக்கு முன் தீர்வு காண கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் மூழ்கும் நிலையில் உள்ளதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை --- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச்சாவடி முதல் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான ஆறு வழி விரைவு சாலையில், தனியார் நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இடைப்பட்ட சாலையில், மேம்பாலங்களின் கீழ் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், சிறு மழை பெய்தாலும் இணைப்பு சாலைகள், மழை வெள்ளத்தில் மூழ்குகிறது. தொடர் மழை பெய்தால் இணைப்பு சாலை மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையும் மழை வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக எளாவூர், ஓபுளாபுரம், பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், சிப்காட் சந்திப்பு, பைபாஸ், கவரைப்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்களின் கீழ் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்குவது வழக்கம். மழைக்காலங்களில், அப்பகுதிகளில் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில், ஓபுளாபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலை மழை வெள்ளத்தில் மூழ்கியதுடன், ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில், மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மேம்பால இறக்கத்தில் வேகமாக வரும் கனரக வாகனங்கள், தேங்கிய தண்ணீரை கடப்பதற்குள் திக்கு முக்காடி போகின்றன. அடுத்தடுத்து கனமழை பெய்ய இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு, மழைநீர் தேங்கும் இடங்களில், வடிகால் ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை