ஊராட்சி அலுவலகம் சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது, கட்டடம் விரிசல் அடைந்துள்ளது.மேலும், தளம் சேதமடைந்து உள்ளதால், மழையின் போது தண்ணீர் ஒழுகி, அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதுதவிர, ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் வைக்கும் அறை, தலைவர் அறை உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதால், ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, பழுதடைந்து உள்ள கட்டடத்தை இடித்து அகற்றி, புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து திருவாலங்காடு ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம், புதிதாக கட்டுவதற்கு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 28 லட்சம் ரூபாய் தேவை என, திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டி, பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.