வங்கி பெண் ஊழியர் தற்கொலை அலுவலர்கள் மீது பெற்றோர் புகார்
திருவள்ளூர்:இந்தியன் வங்கி தற்காலிக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, அவரது பெற்றோர் வங்கி அலுவலர்கள் மீது, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் அடுத்த கூவம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா, 32. மப்பேடு இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி, பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இறந்த பெண் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக கூறி, வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து, மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இறந்த பெண்ணின் சாவிற்கு இந்தியன் வங்கி ஊழியர்கள் காரணம் என, அவரது பெற்றோர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் மகள் தீபா, அவரது திருமண அழைப்பிதழை அளிக்க, வங்கிக்கு கடந்த 9ம் தேதி சென்றார். அப்போது, அங்கிருந்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள், எங்கள் மகளிடம், 'நீ ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளாய். அதை தராவிட்டால், போலீசில் புகார் அளிப்போம்' என, கூறியுள்ளனர். எனது மகள் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கு, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களே காரணம். எனது மகள் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த நிலையில் , பணத்தை எவ்வாறு கையாடல் செய்ய முடியும். அவரது மரணத்திற்கு வங்கி ஊழியர்களே காரணம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.