பராமரிப்பு இன்றி வீணாகும் பூங்கா நிதி ஒதுக்கியும் சீரமைக்காத அலவம்
பொன்னேரி:பொன்நகரில் பராமரிப்பு இன்றி கிடக்கும் விளையாட்டு பூங்காவிற்கு, 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் சீரமைப்பு பணிகளை துவக்காமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகர் பகுதியில், 2019ல் அம்மா விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு பூங்காவில் இருந்த உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகின. நடைபயிற்சிக்காக அமைக்கப்பட்ட கற்கள் சரிந்து, குண்டும் குழியுமாக மாறியது. மழையின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. உடற்பயிற்சி கூடத்தில் இருந்த பொருட்களும் துருப்பிடித்து சேதமாகின. கண்காணிப்பு இல்லாமல் ஒவ்வொன்றாக மாயமாகி, தற்போது உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக, இதே நிலை தொடர்வதால், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. குடியிருப்பு மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, கடந்தாண்டு இறுதியில் பூங்காவை புதுப்பிக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், இதுவரை அங்கு எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாமல், பழைய நிலையே தொடர்வதால், குடியிருப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, பொன்நகர் குடியிருப்பு மக்கள் கூறியதாவது: நிதி ஒதுக்கியும் பணி மேற்கொள்ளாமல் ஒன்றிய நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், ஆளுங்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் உடல்நலனை காக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், பூங்காவை உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.