உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி ரயில்வே சுரங்கப்பாதையில் கசிவு தீர்வு காணப்படாததால் மக்கள் அதிருப்தி

கும்மிடி ரயில்வே சுரங்கப்பாதையில் கசிவு தீர்வு காணப்படாததால் மக்கள் அதிருப்தி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 23-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே ரயில் பாதையின் கீழ், நகர் மற்றும் சிப்காட் பகுதியைச் இணைக்கும் சுரங்கப்பாதை உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக, சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் வழியாக, தண்ணீர் ஊற்றெடுத்து கசிந்து வருகிறது.இதனால், மழைக்காலம் மட்டுமின்றி ஆண்டு முழுதும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால், அதை கடந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கசிவை அடைக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, 2022 நவம்பர் மாதத்தில், ரயில்வே நிர்வாகத்தினர், கசிவை அடைக்கும் பணிகள் மேற்கொண்டனர். ‛போம் இன்ஜெக்டர்' முறையில் கசிவுகளை அடைத்தனர். அடுத்த சில நாட்களில், அடைத்த இடங்களை தவிர்த்து புதிய இடங்களில் தண்ணீர் கசிய துவங்கியது.தற்போது, கசிவுகள் அதிகரித்து, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.சுரங்கப்பாதை பலவீனமாகி வருவதுடன், கசியும் தண்ணீரால் சுரங்கப்பாதை சாலையும் சேதமடைந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு, ரயில்வே நிர்வாகத்தினர் நிரந்தர தீர்வு கண்டு, முற்றிலும் கசிவை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை