உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சவுடு மண் லாரிகளை சிறைபிடித்து பேரம்பாக்கம் மக்கள் போராட்டம்

சவுடு மண் லாரிகளை சிறைபிடித்து பேரம்பாக்கம் மக்கள் போராட்டம்

பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் ஏரியில் சவுடு மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஏரியில் இருந்து, அரசு உத்தரவுப்படி சவுடு மண் அள்ளும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது. இந்த சவுடு மண், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரசு விதிமுறைகளை மீறி, ஏரியில் சவுடு மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால், 'அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று விடுமுறை நாளில் ஏரியில் சவுடு மண் அள்ளும் பணி நடந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, 'அதிகாரிகளிடம் பேசிவிட்டோம்' எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேரம்பாக்கம் மக்கள், நேற்று மதியம் 3:00 மணிக்கு சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை