பைக்கில் பறக்கும் மாணவர்கள் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து படிக்கின்றனர்.பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு, முறையான பயிற்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் வைத்திருப்பதில்லை.கிராமங்களின் முக்கிய வீதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் விதிமுறைகளை பின்பற்றாமல், அதிவேகமாக செல்கின்றனர். உரிமம் வைத்திருப்பது ஒருவராகவும், வாகனத்தை ஓட்டுவது வேறு ஒருவராகவும் இருக்கின்றனர்.முறையாக பயிற்சி பெறாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதால், எதிரே வருவோர் அதிகளவில் விபத்தில் சிக்கியுள்ளனர். தொலை துாரத்திலிருந்து நகர பள்ளிகளுக்கு வருவதற்கு, பல பகுதிகளில் பேருந்து வசதி குறைவாக இருப்பது, டியூசன் செல்வது போன்ற காரணங்களை வைத்து மாணவர்கள் வாகனங்களில் செல்கின்றனர்.சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மணவூர், ஆற்காடுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மாணவர்கள் அதிவேகமாக வாகனங்களில் செல்வது, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக காலை நேரங்களில், இருசக்கர வாகனங்களில் எதிரே வருவோரையும் கவனிக்காமல், மாணவர்கள் சாலைகளில் பறக்கின்றனர். வாகனங்களில் தலைகவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், பெற்றோர் உடனில்லாமலும் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.இவ்வாறு எந்த பாதுகாப்பும் இல்லாமல், இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களை கட்டுப்படுத்த, திருவாலங்காடு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.