பராமரிப்பு இல்லாத நகராட்சி பூங்கா பொன்னேரி மக்கள் அதிருப்தி
பொன்னேரி: நகராட்சிக்கு உட்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதால், பொன்னேரி மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட அப்துல்கலாம் நகர், மூகாம்பிகை நகர், குண்ணம்மஞ்சேரி, சக்தி நகர், பாலாஜி நகர் என, 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சிறுவர்கள் விளையாடுவதற்கான சறுக்குமரம், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்டவைகளும், நடைபயிற்சி செல்பவர்களுக்கு வசதியாக, சிமென்ட் கற்கள் பதித்த நடைபாதைகளும், ஓய்வெடுப்பதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட பூங்காக்கள் தொடர் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கின்றன. பூங்கா வளாகங்கள் முழுதும் முள்செடிகள், புற்கள் சூழ்ந்து புதராகி உள்ளன. நடைபாதைகளில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. பூங்காக்கள் பராமரிப்பு இல்லாத நிலையில், அவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. மேலும் சிறுவர்கள் விளையாட இடமின்றி தவிக்கின்றனர். நடைபயிற்சி செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குடியிருப்புவாசிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பூங்காக்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என,பொன்னேரி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.