ரேஷன் கடை படுமோசம்: சீரமைப்பு எப்போது?
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை பகுதியில் உள்ள தீனதயாளன் நகரில் உள்ள தெலுங்கு காலனி மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, ராஜா தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் பெற்று வந்தனர். அவர்களின் வசதிக்காக, தெலுங்கு காலனி சாலையில், 10 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை அமைக்கப்பட்டது. தற்போது அங்கு, 500க்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்த கட்டடம் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்படும் அறையில் உள்ள தரை முழுதும் பெயர்ந்துள்ளது. அந்த அறையில் எலிகள் அதிகளவில் வந்து செல்கின்றன.ரேஷன் பொருட்களை எலிகள் சூறையாடி வருவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கட்டடத்தின் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அந்த ரேஷன் கடையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கவரைப்பேட்டை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.