உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.30 லட்சத்தில் நடைபயிற்சி வசதியுடன் பாழடைந்த குளம் சீரமைப்பு

ரூ.30 லட்சத்தில் நடைபயிற்சி வசதியுடன் பாழடைந்த குளம் சீரமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், பல ஆண்டுகளாக பாழடைந்த குளம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், நடைபயிற்சி வசதியுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட முகமது அலி தெரு பின்புறம், அரை ஏக்கர் பரப்பளவில் கொசவன்குட்டை உள்ளது. கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக இக்குளத்தில் கழிவுநீர் கலந்து, துர்நாற்றம் வீசியது. மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடைந்து வந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிருப்தியடைந்த பகுதிமக்கள், நான்கு மாதங்களுக்கு முன், திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலரிடம் முறையிட்டனர். இதையடுத்து, நகராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, குளம் சீரமைப்பு பணி துவங்கியது. குளத்தை துார்வாரி, மழைநீர் சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், குளத்தின் கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. இப்பணி சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. வரும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை