தற்காலிக ஆசிரியர் பணியிடம்: இளைய தலைமுறையினர் மகிழ்ச்சி
திருவாலங்காடு:பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், பெரும்பாலும் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிரப்பப்படுகின்றன. முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு 18,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியருக்கு 15,000 ரூபாய் வரையும், தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. சில பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களே, மீண்டும் அதே பணியில் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஆறு மாதங்கள் வரை பணி நீட்டிப்புடன் ஓய்வு பெற்றும், தலைமையாசிரியரின் பரிந்துரையில், அதே பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தொடர்ந்து பணியாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், இளம் தலைமுறை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுநிலை முதல் மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில், இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தற்காலிக ஆசிரியராக பணிபுரியும் வானதி, 30, கூறுகையில், “பி.எட்., முடித்துவிட்டு 'டெட் -- 2' தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. என்னுடன் அனுபவம் வாய்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்,” என்றார். தகுதியானோர் கிடைக்காதபட்சத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். - பள்ளிக்கல்வி துறை அதிகாரி, திருவள்ளூர்.