பறிமுதல் வாகனங்கள் நிறுத்தும் இடமான ஆர்.டி.ஓ., அலுவலகம்
திருவள்ளூர்:வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பறிமுதல் வாகனங்களை போலீசார் குவித்து வைத்துள்ளதால், காயலான் கடை போல் மாறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள், வழக்கு விசாரணை நிறைவடைந்ததும், மாவட்ட காவல் அலுவலகத்தில், அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். நன்றாக உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கோட்டாட்சியர் அலுவலகம், காயலான் கடை போல் காட்சியளிப்பதாக, அங்கு வரும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பாரம்பரிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அதன் பழமையை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்