தெருநாய்களை கட்டுப்படுத்த திருத்தணி மக்கள் எதிர்பார்ப்பு
திருத்தணி: நகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில, மாதங்களாக நகராட்சியில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதால், ஒவ்வொரு தெருக்களிலும், 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. மாவட்டத்தில் பிற நகராட்சியில் நாய்கள் பிடித்து கருத்தடை செய்வதற்கு தனிக்குழு அமைத்துள்ளன. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தெருக்களில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, திருத்தணி நகரில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.