மேம்பால பணிகளை முடிப்பதில் தாமதம்: வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆயத்தம்
மீஞ்சூர்:மீஞ்சூரில், ரயில்வே மேம்பால பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் வருவாய் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள், போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில் நேற்று, பண்டிகை காலங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்தும், சாலை, மின்சாரம், கல்வி தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்தும், நிர்வாகிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மீஞ்சூர் - காட்டூர் சாலையில், மந்தகதியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்து தவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து, விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முடிந்திருக்க வேண்டிய பாலப்பணிகள், எப்போது முடியும் என, தெரியாத நிலையே தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிடம் முறையிடுவது எனவும், இதே நிலை நீடித்தால், ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பண்டிகை காலம் துவங்குவதால், பஜார் பகுதியில் போதிய போலீசாரை பணியமர்த்தி, மக்களுக்கும், அவர் களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டும். மேலும், கிடப்பில் போடப்பட்டுள்ள துணை மின்நிலைய பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.