உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழாய் உடைந்து தண்ணீர் வீண்: சேதமடையும் சாலையால் அச்சம்

குழாய் உடைந்து தண்ணீர் வீண்: சேதமடையும் சாலையால் அச்சம்

பொன்னேரி:குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருவதுடன், மாநில நெடுஞ்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், பொன்னியம்மன் கோவில் எதிரே குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால், தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் பகுதியானது, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக இருப்பதால், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, அங்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆறு மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், தமிழக முதல்வரின் வருகையின்போது, நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பள்ளங்களை மூடி ஒப்பேற்றினர். ஆனால், குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், மீண்டும் அப்பகுதியில் சாலை சேதமடைந்து வருகிறது. வாகனங்கள் பள்ளத்தை தவிர்க்க வலது, இடது என மாறி மாறி பயணிக்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நடவடிக்கை இன்றி கிடப்பதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை