திருவள்ளூர்- அரக்கோணம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
திருவள்ளூர்:திருவள்ளூரில் இருந்து அரக்கோணத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணியர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.திருவள்ளூர்- அரக்கோணம் இடையே திருப்பாச்சூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார், திருவாலங்காடு, மோசூர் வழியாக தடம் எண் 105 சி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே திருவள்ளூர் பணிமனையில் இருந்து இயக்கப்படுவதால், பேருந்துக்காக வழியில் உள்ள கிராம பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த வழித்தடத்தில் தான், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, சிவபெருமான் திருநடனம் புரிந்த, ஐந்து சபைகளில், முதல் சபையான ரத்தினசபை என்றழைக்கப்படும், பிரசித்தி பெற்ற வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, திருவள்ளூர் பணிமனையில் இருந்து அரக்கோணம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.