| ADDED : ஆக 11, 2024 11:28 PM
தூத்துக்குடி : திருச்செந்துாரில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று கோயில் யானை தெய்வானை வெள்ளை நிறத்தில் வீதி உலா வந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலையில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டு வெள்ளை யானையும், தங்கசப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன் சேரமான்பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.