துாத்துக்குடி ரவுடி கொலையில் திண்டுக்கல்லில் 4 பேர் கைது
சேலம்:சேலத்தில், துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேரை திண்டுக்கல்லில் வைத்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.துாத்துகுடி மாவட்டம், பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார், 28. கடந்த ஏப்ரலில் கப்பல் மாலுமி மரடோனா என்பவரை, கொலை செய்த வழக்கில் மதன்குமார் கைது செய்யப்பட்டு, சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட, நீதிமன்றம் உத்தரவிட்டு, நிபந்தனை ஜாமினில் வந்திருந்தார்.நேற்று முன்தினம் காலை, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மதன்குமார், கையெழுத்து போட்டு விட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கும்பல், பயங்கர ஆயுதங்களால் மதன்குமாரின் கையை தனியாக வெட்டி மேஜையில் வைத்து விட்டு, சரமாரியாக தலை, கழுத்து, வயிறு உட்பட, 20 இடங்களில் வெட்டினர். மதன்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்து, அங்கு பதுங்கி இருந்த துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், 26, ஜெயசூர்யா, 26, அந்தோணி, 24, சந்தோஷ், 22, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. 2019ல், டாஸ்மாக் கடையில் குட்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ளார். அப்போது, எதிர் கோஷ்டியை சேர்ந்த ஹரிபிரசாத் தரப்பினர், கடந்த ஆண்டு மதன்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், கைவிரல்கள் மட்டும் வெட்டுப்பட்ட நிலையில் தப்பினார்.அதன் பிறகு தான், வேறு ஒரு விவகாரத்தில், மரடோனாவை மதன்குமார் கொலை செய்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட சென்றுள்ளதை அறிந்த, ஹரிபிரசாத் கூட்டாளிகள், சேலம் வந்து நேற்று முன்தினம் வெட்டி சாய்த்துள்ளனர். கொலை வழக்கில் மேலும் இருவரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.