உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தேவையில்லை :முன்மொழிபவர் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தேவையில்லை :முன்மொழிபவர் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

தூத்துக்குடி : உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு கட்டணம் ஒரு ரூபாயாகும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட வேண்டும். 4 வேட்புமனுக்களுக்கு மேல் தாக்கல் செய்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை நேரடியாகவோ, முன்மொழிபவர் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். வழிமொழிபவர் தேவையில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் முறை உள்ளிட்ட விபரங்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; வேட்புமனுக்களை வேட்பாளர்கள் படிவம் 3ல் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு படிவத்தின் விலை ஒரு ரூபாயாகும். வேட்பாளர்கள் உரிய வேட்பு மனுவினை பெற்றோ அல்லது டைப் செய்த மனுவின் மூலமாகவோ காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். * வேட்புமனுக்களை பெறுவதற்கு இந்திய நிலையான நேரம் பின்பற்றப்பட வேண்டும். இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக கடிகாரம் மற்றும் தனது கடிகாரத்தை இந்திய நிலையான நேரத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும். * வேட்புமனுவினை வேட்பாளர் நேரடியாகவோ அல்லது முன் மொழிபவர் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். வழிமொழிபவர் வேண்டியதில்லை. வேட்புமனுவில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு சின்னங்களை தேர்வு செய்து எழுத வேண்டியதில்லை. * உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்புமனுக்கள் பெறப்பட்டவுடன் அதனை பெற்றுக் கொண்டமைக்கான நேரத்தையும், நாளையும் அதன் மீது குறித்து சுருக்கொப்பமிடல் வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்கு முன்னதாக அல்லது பின்னதாக அளிக்கப்படும் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. * வேட்புமனு படிவம் அனைத்து வகை பதவிகளுக்கும் பொதுவானது என்பதால் தலைவர் அல்லது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பொருத்தமில்லாத பதிவுகளை நீக்கிவிடுதல் வேண்டும். * வேட்பாளர்கள் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சியில் வாக்காளராக இருக்க வேண்டும். * உள்ளாட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர் அந்த உள்ளாட்சியின் ஏதேனும் ஒரு வார்டில் வாக்காளராக இருத்தல் வேண்டும். முன்மொழிபவர் போட்டியிடும் வேட்பாளர் எந்த வார்டில் போட்டியிடுகிறாரோ அந்த வார்டில் வாக்காளராக இருக்க வேண்டும். * வேட்பாளர் ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட வேண்டும். வேட்பாளர் வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட விபரத்தினை வேட்புமனு பரிசீலனைக்கு முந்தைய நாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.* வேட்புமனுக்கள் வார்டு வாரியாக பிரித்து தொடர் எண் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியே தொடர் எண் கொடுக்க வேண்டும். ஒரு பதவிக்கு ஒருவர் நான்கு வேட்புமனுக்கள் கொடுக்கலாம். முதலில் கொடுக்கப்பட்ட நான்கு வேட்புமனுக்களையும் தள்ளுபடி செய்யாமல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வைப்புத் தொகை ஒரு விண்ணப்பத்திற்கு மட்டும் செலுத்தினால் போதும். * வைப்பு தொகையை பொறுத்தமட்டில் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு இதர வகுப்பினர் 200 ரூபாய், ஊராட்சி தலைவர் 600 ரூபாய், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 600 ரூபாய், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 1000 ரூபாய், டவுன் பஞ்சாயத்து மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி உறுப்பினர் 500 ரூபாய், நகராட்சி உறுப்பினர் 1000 ரூபாய், மாநகராட்சி உறுப்பினர் 2000 ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றால் இதில் பாதி தொகை செலுத்தினால் போதும். * நான்கு மனுக்களுக்கு மேல் கூடுதல் மனுக்கள் கொடுத்தால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விபரத்தை அறிவிப்பு பலகை மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ