தேரோடும் சாலையை உடைப்பதா? அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்
துாத்துக்குடி,:திருச்செந்துாரில், புதிய கான்கிரீட் சாலையை நகராட்சி அதிகாரிகள் உடைக்க முயன்றதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் சமீபத்தில் பல கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில், ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, புதிய கான்கிரீட் சாலையை உடைத்த நகராட்சி பணியாளர்களை கண்டித்து, அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.புதிதாக போடப்பட்டுள்ள சாலையை உடைத்தால், தேரை இயக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் நாள் தேரோட்டம் நடைபெறும். தேர் செல்லும்போது எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக, சில மாதங்களுக்கு முன், தெற்கு ரத வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.திடீரென அந்த சாலையை உடைக்கத் துவங்கியதால் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 30 அடி அகலம் கொண்ட சாலையின் ஓரத்தில் 3 அடிக்கு கான்கிரீட்டை உடைத்தால், தேர் செல்வதில் பாதிப்பு ஏற்படும். எனவே, தேரோடும் சாலையை உடைக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.