உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசையில் தசரா விழா கோலாகலம்

குலசையில் தசரா விழா கோலாகலம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா செப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்களாக, தினமும் இரவில், பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் வேடமணிந்து, முத்தாரம்மனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு நடந்தது. இதற்காக, சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன் முத்தாரம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வெள்ளத்தில், சிம்ம வாகனத்தில் அம்பாள் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரை வந்தடைந்தார். முதலில், தன்முகமாக வந்த மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக சிங்க முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷா சூரனையும் வதம் செய்தார். அப்போது அங்கு கூடி யிருந்த பக்தர்கள், 'ஓம் காளி, ஜெய் காளி' என கோஷம் எழுப்பினர். 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். துாத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தலைமையில், 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ