சஸ்பெண்டான மதபோதகர்களை விசாரிக்க தனிக்குழு அமைப்பு
துாத்துக்குடி:'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள மதபோதகர்கள் நான்கு பேரிடம் விசாரணை நடத்த தனிக்குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய டயோசீஸ் கீழ் உள்ள துாத்துக்குடி நாசரேத் மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளதால், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணியை நிர்வாகியாக உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.கடந்த 8ம் தேதி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து காரில் வெளியேறிய ஜோதிமணியை வழிமறித்து, மதபோதகர்கள் நான்கு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார்.சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் மதபோதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாஷ் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக, மதபோதகர்கள் நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து திருமண்டல நிர்வாகியான ஜோதிமணி உத்தரவிட்டார்.நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, தனிக்குழு அமைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தார். 'மறு உத்தரவு வரும் வரை மதபோதகர்கள் நான்கு பேரும் மண்டலத்திற்கு உட்பட்ட எந்த சபையிலும், எந்தவித பணியிலும் ஈடுபடக் கூடாது' என, தெரிவித்துள்ளார்.