உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாநகராட்சியில்ஆதிதிராவிடர்களுக்கு வார்டுகள் குறைப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில்ஆதிதிராவிடர்களுக்கு வார்டுகள் குறைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அந்த சமுதாயத்தில் உள்ள பல்வேறு சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளுடன் புதியதாக அடுத்த மாதம் தேர்தலை சந்திக்க உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தற்போது 7 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 18 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அந்த மக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆதிதிராவிட அமைப்புகளின் பல்வேறு சங்கங்கள் இது சம்பந்தமாக தமிழக முதல்வர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இந்த பிரச்னை குறித்து தகவல் தெரிவித்து இட ஒதுக்கீடு அடிப்படையில் 9 முதல் 10 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.தூத்துக்குடி ரட்சன்யபுரம் ஆதிதிராவிட சமூக ஊழியர் சங்கம், அந்தோணிகோயில் தெரு இந்திய குடியரசு கட்சி, தமிழரசன் தலைமையில் உள்ள தூத்துக்குடி இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கார் சேரிடபிள் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதிதிராவிட சங்கள் தனித்தனியாக இணைந்து முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது 4 வார்டுகள் ஆதிதிராவிட வார்டுகளாக இருந்தன. தற்போது புதியதாக சங்கரப்பேரி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய பஞ்சாயத்துக்கள் சேர்ந்துள்ளது. தற்போது ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதியில் ஆதிதிராவிட மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வார்டுகள் ஒதுக்க வேண்டும். குறைந்தப்பட்சம் 9 முதல் 11 வார்டுகள் வரை மாநகராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்க வேண்டும். உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் ஒட்டு மொத்த ஆதிதிராவிட சமுதாயத்தினர் அனைவரும் இதற்காக பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். இவ்வாறு அந்த அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் குழு அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திடீர் போர்கொடியால் புதிய பரபரப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்