ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், பண்டாரம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு:தமிழகத்தில் சில உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையையும், ஸ்டெர்லைட் அனல்மின் நிலையத்தையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இதற்காக தமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில், கிராம மக்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். ஆலை தற்போது மூடப்பட்டுள்ளதால், அனைவரும் படித்ததற்கு ஏற்ற உரிய வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வெளியூர்களில் குறைந்த சம்பளத்திற்கு, தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மற்றும் பல ஆலைகள் திறக்கப்பட்டால் தான் இப்பகுதி மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.