| ADDED : ஜூன் 22, 2024 02:02 AM
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம்,வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் சதீஸ்குமார், 22. வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சேதுபதி, 24. வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாண்டி, 30; மூவரும் எலக்ட்ரீஷியன்கள்.மூவரும், 'மாருதி ஜென்' காரில் சேலம் சென்று, வெள்ளக்கோவிலுக்கு நேற்று திரும்பினர். பாண்டி காரை ஓட்டியுள்ளார். முத்துார், சாந்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் கவியரசு, 37. சக்கரைபாளையத்தை சேர்ந்தவர் சிவகார்த்திக், 32; இருவரும் 'ஹூண்டாய் ஐ - 20' காரில் முத்துாரிலிருந்து ஈரோட்டுக்கு சென்றனர். காரை கவியரசு ஓட்டினார். முத்துார் - ஈரோடு சாலையில், ஒரு டிராவல்ஸ் கம்பெனி அருகில் இரு கார்களும், மாலை, 5:00 மணிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், சேதுபதி, பாண்டி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தலையில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார், மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் நரம்பியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொரு காரில் வந்த கவியரசு, சிவகார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர். வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.