| ADDED : ஏப் 26, 2024 11:42 PM
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவை ஆய்வு செய்து வினியோகிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கிராமங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.குடிநீரை சுத்திகரிப்பதற்கு, அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குளோரினேஷன் செய்து, பின் வீடுகளுக்கு வினியோகிக்க பம்ப் செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக, போடிபட்டி உட்பட சில கிராமங்களில் குடிநீர் அதிகமான மருந்து வாசனையுடன் வந்துள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினர்.சில பகுதிகளில், மிகுதியான மருந்து வாசனையால், குழந்தைகளுக்கு வழங்குவதற்கும் மக்கள் அச்சமடைந்தனர்.கோடையில் இவ்வாறு குடிநீரை பயன்படுத்த முடியாமல், அதிகமான குளோரினேஷன் செய்யப்பட்டதால், மக்கள் அதிருப்தியடைந்து ஒன்றிய நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர்.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: வழக்கமாக ஊராட்சிகளில் தான், குடிநீர் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுவதற்கு முன்பு குளோரினேஷன் செய்யப்படும்.ஆனால் தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல், அணை பகுதிகளில் கிராமங்களுக்கு பம்ப் செய்வதற்கு முன்பாகவே, குடிநீர் வடிகால் வாரியம் குளோரினேஷன் செய்துள்ளது. இதனால் குளோரின் அளவு மிகுதியாகி வாசனை வந்துள்ளது.தற்போது இப்பிரச்னை கண்டறியப்பட்டு, ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் முன்பு, குளோரின் அளவு டெஸ்டர் வாயிலாக, ஆய்வு செய்யப்பட்டு, பின் வினியோகிக்கப்படுகிறது.இவ்வாறு கூறினர்.