உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, சுங்கம், விளாமரத்துப்பட்டி, கோவை, போடிபட்டி, புக்குளம், பூளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 விவசாயிகள், 58 மூட்டை அளவுள்ள, 2,900 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.90.03 முதல், ரூ.98.09 வரையும், இரண்டாம் தரம், ரூ.84.86 முதல், 89.86 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்தில், கொப்பரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொப்பரை வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது.இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.