திருப்பூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம், 'நிப்ட்-டீ' கல்லுாரி சார்பில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்க உள்ளது.ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறையில் பணியாற்ற, திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், அனைத்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது., திருப்பூரில் மட்டும், 8,500க்கும் அதிகமான, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன; எட்டு லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இத்தொழில், மென்மேலும் விரிவடைய இருப்பதால், தொழிலாளர் தேவையும் பலமடங்கு உயர்ந்து வருகிறது. பனியன் தொழில்துறையில், அனைத்து பிரிவுகளிலும், பயிற்சி பெற்ற தொழிலாளரை உருவாக்க வேண்டும். அதற்காகவே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட, 'நிப்ட் -டீ' கல்லுாரி, திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக, 18 முதல், 35 வயதிற்கு உட்பட்ட, இளைஞர்களுக்கு இந்த ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தற்போது, ஆடை வடிவமைப்புக்கான, 'உதவி பேஷன் டிசைனர்' பயிற்சி துவங்க உள்ளது. மொத்தம், 100 நாட்கள் நடக்கும் பயிற்சியில், பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு படித்த, 120 பேர் சேர்ந்து பயன்பெறலாம். தங்குமிடம், உணவு, பாடப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும். திறன் பயிற்சியுடன், தையற்கலை பயிற்சி, 'பேட்டர்ன் மேக்கிங்' மற்றும் கணினி பயிற்சி, ஆங்கில கல்வி, மற்றும் மென்திறன் பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில், பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மாதம், 12 - 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்துடன், 100 சதவீதம் வேலை வாய்ப்பும் உருவாக்கி கொடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், 80563 23111, 87546 23111 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'நிப்ட்-டீ' கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.