அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுாரில், ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. 18 ஆண்டுக்கு பின், இவ்விரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பணி நிறைவு செய்து, ஆக., 28ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்று காலை, 6:30 முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாளுக்கும், தொடர்ந்து, 9:00, முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, நேற்று உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை நடைபெற்றது.முன்னதாக, மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, யாக சாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டு, நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் கோவில் முன்னாள் அறங்காவலர்கள், மிராசுதாரர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.