உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், அதிகப்பட்சமாக ஒரு கிலோ கொப்பரை, ரூ.94.16 க்கு விற்பனையானது. கடந்த சில வாரங்களாக, கூடுதல் விலை கிடைத்து வருவதால், கொப்பரை வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, பணத்தம்பட்டி, கணக்கம்பாளையம், பொள்ளாச்சி, புக்குளம், விளாமரத்துப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 16 விவசாயிகள், 6,800 கிலோ அளவுள்ள, 136 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.92.26 முதல், ரூ.94.16 வரையும், இரண்டாம் தரம், ரூ.75.30 முதல், 88.88 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.கொப்பரை ஏலத்தில், கடந்த சில வாரங்களாக, கூடுதல் விலை கிடைத்து வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.