உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ. 94.29 க்கு ஏலம் போனது. விலை உயர்ந்து வருவதால், வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள், உலர்களம் அமைத்து, கொப்பரை உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தியாகும் கொப்பரையை உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, சுங்கம், விளாமரத்துப்பட்டி, கோவை, போடிபட்டி, புக்குளம், பூளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 விவசாயிகள், 36 மூட்டை அளவுள்ள, 1,800 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ. 85.26 முதல், ரூ. 94.29 வரையும், இரண்டாம் தரம், ரூ. 72.21 முதல், 80.16 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் கொப்பரை ஏலத்தில், வாரம் தோறும் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.கடந்த சில வாரங்களாகவே, உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கொப்பரைக்கான விலை உயர்ந்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் அதிகளவு கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இங்கு, விவசாய விளைபொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ், மறைமுக ஏலம் விடப்படுகிறது. எனவே, விவசாயிகள், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.