உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் முற்றுகை; தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு

இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் முற்றுகை; தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு

திருப்பூர்; மூலனுாரில் நாய்களின் தாக்குதலுக்கு, 25 ஆடுகள் பலியான நிலையில், விவசாயிகள், ஆடுகளுடன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர்.வெள்ளகோவில், தாராபுரம், காங்கயம், மூலனுார் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது அதிகரித்து வருகிறது; இதுவரை, நுாற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகியுள்ள நிலையில், 'இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.நேற்றுமுன்தினம் இரவு, மூலனுார் பட்டத்திபாளையத்தில், மணிவேல் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த நாய்கள், அங்கிருந்த 25 ஆடுகளை கடித்து கொன்றன. வெள்ளகோவில் சேனாதிபாளையத்திலும், 7 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து கொன்றன.இறந்த ஆடுகளுடன், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மூலனுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 'இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, முற்றுகையை தொடர்வோம்' எனக் கூறினர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு தங்களின் குறைகளை கொண்டு செல்வதாக கூறி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், 'நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளை, கால்நடை வளர்ப்போர் பிரேத பரிசோதனை செய்து, அறிக்கையை வைத்துள்ளனர். இழப்பீடு தொடர்பான பரிந்துரை மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்,' என்றனர்.

அரசு மவுனம் சாதிக்கலாமா?

விவசாயிகள் கூறுகையில், 'ரத்த வாடைக்கு பழக்கப்பட்டு போன நாய்கள், கால்நடைகளை தாக்குவதை தங்களின் இயல்பாகவே மாற்றிக் கொண்டுவிட்டன. அந்த நாய்கள் வெறிபிடித்த நிலையில் உள்ளனவா; அவை, மனிதர்களை கடிப்பதால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா; அந்த நாய்கள், வெறிநோயால் பாதிக்கப்பட்டிருக்குமா என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னையில் அரசு மவுனமாக இருப்பது, கண்டிக்கத்தக்கது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை