உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணவர் 2வது திருமணம்; தடுத்து நிறுத்திய மனைவி

கணவர் 2வது திருமணம்; தடுத்து நிறுத்திய மனைவி

பல்லடம்;கணவருக்கு நடக்க இருந்த இரண்டாவது திருமணத்தை, ஜமாபந்தியில் அளித்த மனு மூலம், மனைவி தடுத்து நிறுத்தினார்.பல்லடம் அருகே அனுப்பட்டியை சேர்ந்த 28 வயது வாலிபர், கோவை யில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, 2019ல் திருமணம் நடந்தது. பிரச்னை காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்தனர்.வேலை பார்க்கும் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். இதற்காக வேறு மதத்துக்கு மாறிய அந்த வாலிபர், பெயரை மாற்றம் செய்ய உள்ளதாகவும் இன்று திருமணம் நடப்பதாகவும் மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த மனைவி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனுஅளித்தார். 'போலீசார் தனது மனுவை ஏற்கவில்லை; எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்,' என்று, சப்-கலெக்டர் சவுமியாவிடம், கண்ணீர் மல்க கூறினார்.உடனே, புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்லடம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால், கணவர் மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள இருந்ததாக கூறப்படும் இளம்பெண், அவரது குடும்பத்தினர் பல்லடம் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர்.பேச்சுவார்த்தை நடத் திய போலீசார், 'கோர்ட் மூலம் உங்களது பிரச்னைகளை சந்தித்து கொள்ளுங்கள்; அதுவரை திருமணம் செய்யக்கூடாது' என்று இரு தரப்பினரிடமும் கையொப்பம் பெற்று, அனுப்பி வைத்தனர்.ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையால், திருமணமான இளம் பெண்ணுக்கு ஏற்பட இருந்த அநீதி தவிர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை