| ADDED : ஆக 10, 2024 11:56 PM
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நீடித்த நிலைத்தன்மை குறித்த தகவல்களை பகிரும், சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சமூக சந்தைகளுக்கான மையம் மற்றும் 'பேர் டிரேடு இந்தியா' அமைப்பு சார்பில், உற்பத்தி தொழிற்சாலைகளில் 'கார்பன் உமிழ்வு மற்றும் கண்காணிப்பு' என்ற தலைப்பில், பயிற்சி பட்டறை நடந்தது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் இளங்கோவன், பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், 'பிராண்டிங்' மற்றும் நிலைத்தன்மை (சஸ்டெய்னபிலிட்டி) கமிட்டி தலைவர் ஆனந்த், துணை தலைவர் மேழிசெல்வன் உள்ளிட்டோர், பசுமை சார் உற்பத்தி குறித்து பேசினர்.நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி என்பது, நிலைத்தன்மை என்று கூறப்படுகிறது. நிலைத்தன்மை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், தேவையான வழிகாட்டுதல் வழங்கவும், சிறப்பு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 'சஸ்டெய்னபிலிட்டி' சிறப்பு சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது. அதாவது, 93600 08200 என்ற தொடர்பு எண்ணுடன், சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.பொதுசெயலாளர் திருக்குமரன் கூறுகையில், ''அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன; வளம் குன்றா வளர்ச்சி நிலை கோட்பாடுகள், சமூக பங்களிப்பு, ஏற்றுமதி ஆடைகளுக்கான டிஜிட்டல் பாஸ்போர்ட் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது,'' என்றார்.