| ADDED : மே 04, 2024 11:19 PM
திருப்பூர்;'மண்ணுக்கு அழகு மரம்... மனிதருக்கு அழகு அறம்' என்று கூறுவதுபோல், பசுமை குடை பிடித்தது போன்ற மரங்களே, ஊரை அலங்கரிக்கின்றன.கிராமப்புறங்களில், இன்றும் மரங்கள் உயிர்வாழ்கின்றன. தொழில் வளர்ச்சி, வளர்ச்சிப்பணி, புதிய குடியிருப்பு உருவாக்கம் போன்ற காரணங்களால், எண்ணற்ற மரங்கள் அழிக்கப்படுகின்றன.இருபுறமும் பசுமை கூடாரம் போன்ற மரங்களை வெட்டி ரோடு விரிவாக்கம் செய்வதால், வெப்ப வழிச்சாலைகளாக மாறிவிடுகின்றன. எண்ணற்ற பசுமை அமைப்புகளின் தயவால், இன்றும் மரங்கள் உயிர்ப்புடன் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும், வீடுகள் மற்றும் மனிதர்கள் எண்ணிக்கையுடன் கணக்கிடுகையில், மரங்கள் பற்றாக்குறைதான்.நகரப்பகுதியில் கான்கிரீட் வீடுகளுக்கு இடையே, கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில், 'மொபைல் டவர்'களே அதிகம் தென்படுகின்றன; மரங்கள் குறைவுதான். எத்தனை மரம் இருந்தாலும், நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க, வீட்டுக்கு ஒருமரம் வளர்க்க வேண்டும்! பிறந்த நாள் விழா, திருமண நாள், குடும்ப விழாக்களை, இயற்கையுடன் இணைந்து கொண்டாடிட, மரக்கன்றுகளை நட்டு வளர்க்க, இளம்தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்!