| ADDED : ஜூலை 16, 2024 10:48 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாப்பிணியை சேர்ந்தவர் வேலுசாமி, 59; சிவன்மலை கோவிலில் பணியாளராக உள்ளார். இவரது மகள் நிவேதா, 28. கடந்த சில ஆண்டுக்கு முன்பு வெள்ளகோவிலை சேர்ந்த பிரபாகரன், 38 என்பவருடன் திருமணம் நடந்தது. பத்து வயதில் மகன் உள்ளார். கணவரின் மதுப்பழக்கம் காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு, காங்கயத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நிவேதா திரும்பினார்.கடந்த, 3ம் தேதி மாமனார் வீட்டுக்கு கணவர் பிரபாகரன், மனைவியை அனுப்பி வைக்க பேசிய போது மாமனார் வேலுசாமியுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபாகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமனாரை குத்தி விட்டு தப்பி சென்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருமகன் பிரபாகரனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.