பறவை சரணாலயத்துக்கு பிரத்யேக லோகோ
திருப்பூர், : திருப்பூர், கூலிபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளத்துக்கு, உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டு பறவைகளும், வலசை வருகின்றன. தமிழக அரசால் இந்த குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட வனச்சரகர் சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது:பறவைகள் சரணாலயத்துக்கான சிறந்த லோகோவை தேர்வு செய்வதற்கான போட்டி துவங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், டிசைனர்கள் யார் வேண்டுமானாலும், தனியாகவோ, குழுவாக இணைந்து லோகோ உருவாக்கலாம்.லோகோவில், சரணாலயத்தின் பெயர், ஈரநிலம், பறவைகள் சரணாலயம் என்பதை குறிப்பிடும் வகையிலான அம்சங்கள் இடம்பெறவேண்டும். வண்ணம் மற்றும் கருப்பு - வெள்ளையாக பிரின்ட் செய்ய ஏற்றவகையில், வழங்கவேண்டும்.சிறந்த லோகோ தேர்வு செய்யப்பட்டு, சரணாலயத்தின் அடையாள குறியீடாக பயன்படுத்தப்படும். சரணாலயத்திலும், சரணாலய இணையதளம் உள்பட அனைத்து இடங்களிலும் லோகோ பயன்படுத்தப்பட்டு, பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்படும்.தேர்வாகும் லோகோவை உருவாக்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.பறவைகள் சரணாலய லோகோவை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள் அல்லது டிசைனர்களுக்கு பெருமையும் வந்து சேரும். விவரங்களுக்கு https://www.nbstiruppur.comஇணைதயத்தை பார்வையிடலாம். 94861 70714, 852682110 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். லோகோவை, இம்மாதம் 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.