இன்று ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி
உடுமலை; ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில், ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது.தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஏரிகள் மற்றும் குளங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி, இன்றும், நாளையும் நடக்கிறது.அதன் அடிப்படையில், ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள, நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம், உடுமலை பெரியகுளம், ராயகுளம் மற்றும் உப்பார் அணை உள்ளிட்ட, 20 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.இந்த கணக்கெடுப்பு பணியில், வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன குழுக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இன்று, பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி வகுப்பு மற்றும் கணக்கெடுப்பிற்கு தேவையான தரவு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. நாளை ( 9ம் தேதி) காலை, 6:30 மணி முதல், 11:00 மணி வரை, நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.நீர்நிலைகளில் உள்ள பறவைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை, இந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில் கணக்கெடுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படுகிறது, என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.